சமகால நாட்டு நடப்புக்கள் தொடர்பில் அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் இணைந்து செயலாற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (02.06.2019) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் பங்காளர்களாகிய நாம் வகிக்கும் அமைச்சுப் பதவிகளின் மூலமாக வெறும் அபிவிருத்திகளை மாத்திரம் மக்கள் எம்மிடம் எதிர்பார்க்கவில்லை, அவர்களது பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தினையும், சகஜ நிலையினையும் அனைத்துப் பிரஜைகளுக்குமுள்ள மனித உரிமையுடன் கூடிய அம்சங்களையும் வேண்டி நிற்கிறார்கள், அவற்றை உறுதி செய்வது எமது முழு முதற் கடமையாகும். இவற்றை செய்யாமல் அமைச்சுப் பதவிகளை அலங்கரிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. மக்களின் நலன்சார் விடயங்களை முன்னெடுப்பதற்காக அனைவரும் கட்சி, அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயலாற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமகால நிகழ்வுகள் தொடர்பில் எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் பல்வேறு முன்னெடுப்புக்களை நாம் மேற்கொண்டு வருகிறோம் .
அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் இணைந்து செயலாற்றி அனைவரும் ஒருமித்து சில தீர்க்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதகத்தில் ஏற்பட்டுள்ள சாதகமாகக் கருதி இதனை அனைவரும் பக்குவமாக அணுக வேண்டும்.
ஆகவே மக்கள் நிதானமாகவும் பொறுமையோடும் ஒற்றுமையுடன் நடந்து கொள்வது அவசியமாகும்.
அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பிரச்சாரங்களை கடந்த காலங்களில் முன்னெடுத்து வந்த முகவர்கள் ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலை மையமாக வைத்து நேரடியாக முஸ்லிம்களின் உயிர், உடமைகள், பொருளாதாரத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதனால் சில பகுதிகளில் உயிர்களும் காவு கொள்ளப்பட்டுள்ளன, முஸ்லிம்கள் தமது புனித றமழான் கடமைகளை அனுஷ்டிக்க முடியாமல் அல்லல்பட்டனர்.
மிக கேவலமான முறையில் வணக்கஸ்தலங்கள் குறிவைக்கப்பட்டன, இவ்வாறான செயலில் ஈடுபட்ட காட்டுமிராண்டிகளுக்கும் மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்குமிடையில் வேறுபாடுகள் ஏதும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments: