சூடுபிடித்துள்ள தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் அரசியலில் ஆளாளுக்குக் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்வதையும், விமர்சனக் கணைகளை அள்ளி வீசுவதையும், தத்தமது ஆதரவுகளை ஒவ்வொரு சாராருக்கும் தெரிவிப்பதையும் அன்றாடம் கண்டு வருகின்றோம்.
அது அவரவர்களுடைய தேர்வு, மற்றும் கருத்துச் சுதந்திரங்களாகும்.
அதில் முஸ்லிம்களும் முத்தரப்பையும் ஆதரிப்பவர்களாக பிரிந்து கிடந்து அரசியல் பேசுவதையும் , ஆதரவுகளைத் தெரிவிப்பதையும் அவதானிக்கக் கிடைக்கின்றது. அதுவும் ஒவ்வொரு தனிநபர் சுதந்திரமெனலாம்.
ஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் , முஸ்லி சமூகத்தின் வாக்குகளின் வகிபங்கென்பது மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன.
காரணம், தற்போதைய நல்லாட்சி(?) யிலும் சரி, இதற்கு முந்தைய பொல்லாட்சியிலும் சரி , முஸ்லிம் சமூகம் பலவிதமான இனவாத செயற்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டு , பல்வேறு இழப்புக்களையும் சந்தித்து நிர்க்கதியாக்கப்பட்டிருந்தது என்பது மறக்கவோ மறைக்கவோ முடியாத கசப்பான உண்மைகளாகும்.
இப்படியான அசாதாரண சூழ்நிலையில் எதிர்நோக்கியிருக்கும் ஜனாதிபதித் தேர்தலானது முஸ்லிம் சமூகத்திற்கு மிக முக்கியமானதொரு தருணமாகும். எமது இருப்பையும், பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு சிறந்த தலைவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், தேவையும் காலத்தின் இன்றியமையாக் கட்டாயக் கடமையாகும்.
ஓட்டுக்களை நரித்தனமாக சூறையாடுவதற்கான சதித்திட்டங்கள் ஆங்காங்கே நாசூக்காக அமுல் படுத்தப்படுகிறன. ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வாக்குகளும் ஒருமுகப்படுத்தப் பட்டு ஓர் பேரம் பேசும் அரசியலை உண்டாக்குவதற்கான முயற்சியே சமூக மன்றத்தில் மேற்கொள்ளப் பட வேண்டும். அதற்காகன அறிவுறுத்தல்களே மக்களைச் சென்றடைய வேண்டிய தேவையுள்ளது. அதை முஸ்லிம் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் ஒன்று கூடி தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.
யார் ஜனாதிபதி என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் சமூகம் இருக்க வேண்டும். தங்களையும், தங்களது உடமைகளையும், பதவியையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மேற்படி தேர்தலில் மக்களது வாக்குகளை வீணாக்கிவிடாமல், சிறந்த தீர்மானங்களையும், திட்டங்களையும், உடன்படிக்கைகளையும் சமூகத் தலைவர்கள் கண்டிப்பாக மேற்கொண்டாக வேண்டும். அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் அனைவருக்கும் இது தார்மீகப் பொறுப்பாகும்.
இவ்வாறான ஒரு சூழலில் குறிப்பாக நேற்றைய தினத்திலிருந்து CEYLON THAWHEEDH JAMATH (CTJ) இன் பொதுச் செயலாளர் சகோதரர் அப்துல் ராஸிக் அவர்களது பெயரால் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
அதாவது, "எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்
CEYLON THAWHEEDH JAMATH (CTJ) இன் ஆதரவு கோதாபாய ராஜபக்ஷ அவர்களுக்கே" என்று சகோதரர் அப்துல் ராஸிக் அவர்கள் தெரிவித்ததாக ஒரு பொய்யான திரிவுபடுத்தப் பட்ட தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.
இதன் உண்மை நிலை என்ன?
கீழே பதிவிடப்பட்டுள்ள லிங்கில் சகோதரர் அப்துல் ராஸிக் அவர்கள் குறிப்பிட்ட ஒரு கருத்தையே திரிவுபடுத்தி பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
அதில் அவர் என்ன குறிப்பிட்டுள்ளார் ? என்பதை நடுநிலையுடன் சிந்தியுங்கள்.
"நாட்டின் தேசிய பாதுகாப்பையும் முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுக்கும் நபருக்கே முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் சரியே. இந்த கோரிக்கைகளுக்கு எந்த வேட்பாளர் உடன்படுகிறாரோ, எழுத்தில் ஒப்பந்தம் செய்கிறாரோ அவருக்கே நம் வாக்குகள் சென்றடைய வேண்டும். கட்சி அரசியல் செய்யும் காலம் அல்ல இது. சமூகத்தின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்யப்பட வேண்டிய தருணம் இது” என்றே அவர் ஆரம்பம் முதல் இறுதி வரை கூறுகிறார்.
“அவர் யார் என்பதை முஸ்லிம் ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்ய வேண்டும் என்பதே நம் நிலைபாடு" என்றும் இறுதியில் தெளிவாக தம் முடிவையும் குறிப்பிட்டுள்ளார்.
https://youtu.be/e9_838cJh9w
👆👆👆
எதற்காக இந்த அரசியல் நாடகம்?
================================
🔴அவதூறுகளை அள்ளி விட்டு கருத்தாடல்களையும் இறுதி முடிவையும் கவனிக்காமல் பொய்யான செய்திகளை மக்கள் மயப்படுத்தி சிலோன் தெளஹீத் ஜமாஅத்தும் அரசியல் செய்யும் ஜமாஅத் என்பதைப்போல் காட்ட முனைவது.
🔴இதன் மூலம் ஜமாஅத்தை நம்பியிருக்கும் மக்கள் மத்தியில் ஒரு அவநம்பிக்கையை ஜமாஅத் மீது உண்டாக்குவது.
🔴சகோதரர் அப்துல் ராசிக் கோத்தாப்பாயவுடைய ஆதரவாளர் என்று காட்ட முனைவது, அல்லது எதிரியாக்கத் திட்டமிடுவது.
🔴மக்களுடைய சிந்தனைகளைத் திசைதிருப்புவது.
போன்ற பல காரணங்களைக் குறிப்பிடலாம்.
இத்தகைய அவதூறான தகவல்களைப் புனைந்து பரப்பும் கள்ளப் பேர்வழிகளையும், இதன் உண்மைத் தன்மைகளைப் புரிந்து கொள்ளாமல் அப்படியே அந்தத் தகவல்களைப் பரப்பும் தவறைச் செய்பவர்களையும் எச்சரிக்கின்றோம்.
ஏதோ ஒரு உள்நோக்கத்தில் எவனோ ஒரு பாவி இவ்வாறு தகவல் பரிமாறுகிறான். மக்களை திசை திருப்புகிறான்.
ஒரு தகவலைக் கொண்டுவந்தால் முதலாவது , முஸ்லிம்கள் அது குறித்த தெளிவைப் பெற்ற பின்பே பரப்புவதா? இல்லையா? என்ற முடிவுக்கு வர வேண்டும். இதுவே திருமறையின் அறிவுரை.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 49:6
எனவே குறித்த சகோதரர் அப்துல் ராசிக் அவர்களது பெயரால் ஒரு செய்தி பரப்பப்பட்டுக் கொண்டிக்கின்றதென்றால் அது பொய்யானது என்பதைப் புரிந்து மக்கள் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தோ சகோதரர் அப்துல் ராசிக் அவர்களோ அரசியல் களத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் பணியாற்றுபவர்கள் அல்ல என்பதை இதன் மூலம் அறிவித்து கொள்கிறோம்.
ஏ. எல். எம். ரிஸான்
தலைவர்
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்