சொந்த நாற்றமென்றாலும் சொல்லியாகவேண்டும்!
ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள பள்ளிவாயல் ஒன்றிற்கு மாலை 4 மணியளவில் நானும், நண்பரும் குடும்பங்களோடு அஸர் தொழச்சென்றோம்.
பெண்கள் பகுதிக்கு தொழச்சென்றவர்கள் போன வேகத்திலேயே திரும்பி வந்தார்கள்.
அங்கே பாத்ரூம் (வுழூ எடுக்கும் பகுதி) படு மோசமாக இருப்பதாக சொன்னார்கள்.
குழந்தைகளின் பெம்பர்ஸ், பெண்களின் மாதவிடாய் பேட்ஸ் (pads) என்பவற்றையெல்லாம் அந்த பகுதிகளில் யாரோ வீசிச்சென்றிருப்பதாக சொன்னார்கள்.
இதனை நாங்கள் பள்ளிவாயல் இமாமிடம் முறையிட்டு பெண்களுக்கு தொழ ஒரு இடத்தை கேட்டோம். அவர் ஆண்கள் பகுதியில் ஒரு மறைவான இடத்தை ஏற்பாடு செய்து தந்தார்.
இந்த படுபாதகச்செயலை செய்கின்றவர்கள் வேறு யாருமல்ல முஸ்லிம் பெயர்களை கொண்ட பெண்கள்தான் என்பது அவருடனான தொடர் உரையாடல் மூலம் அறியக்கிடைத்தது.
“ உம்ராக்கு போற குரூப்பெல்லாம் இங்க வந்து தங்குற, அவங்க போற நேரம் எதையும் சுத்தம் பண்றதும் இல்ல, அதேபோல பயணம் வாற பெண்களும் சுத்தமில்லாத வேலைகள் பாக்குறாங்க. எங்கட பள்ளி மோதின்சாப்தான் எல்லாத்தயும் க்ளீன் பண்ண வேணும். அவர் எத்தன வேலையத்தான் பார்ப்பார்” என்று சலித்துக்கொண்டார் பள்ளி இமாம்.
கடும் ஆத்திரமாக இருந்தது.
அல்லாஹ் இந்த சமூகத்தை கடுமையாக சோதிப்பான், சோதிக்கவே வேண்டுமென்று மனசு அல்லல் பட்டது.
உம்ரா குரூப் நடத்துற உனக்கு பயணிகள தங்க வைக்க இந்த பள்ளிகள தவிர வேற இடமில்லையா?
மாபோல, வத்தள , நீர்கொழும்பு, மினுவங்கொட பகுதி பள்ளிவாயல்கள்தான் இந்த உம்ரா வியாபாரிகளின் பலி பீடங்கள்.
நீங்கள் லட்சக்கணக்கில் பணத்தை சுளையாக கறந்துதானே இந்த வணிகத்தை செய்கின்றீர்கள்? உங்களது பயணிகளை ஹோட்டல்களில் தங்கவைக்க வேண்டியதுதானே?
தவிர்க்க முடியாத சூழலில் ஓசியில் பள்ளிவாயலை பாவிக்க நேர்ந்தால் அதற்குரிய முறையில் அதனை பராமரிப்பது உனது கடமை இல்லையா?
அது போலவே இலங்கை முழுக்க போக்குவரத்து பிரதான வீதிகளில் இருக்கிற பள்ளிகளில் பெண்களுக்காக பிரத்தியேக தொழும் அறைகளை/ வசதிகளை வைத்திருக்கிறார்கள்.
இவற்றில் பெரும்பாலானவற்றை தொழ முடியாத இடங்களாக நமது தீன்குலத்து பெண்கள் மாற்றிவைத்திருக்கிறார்கள்.
பிள்ளைகளுக்கு பெம்பர்ஸ் மாற்றவும் தங்களுக்கு பேட் ( pad) மாற்றவும் உரிய இடங்களாக பலர் இதனை மாற்றிவைத்திருக்கிறார்கள்!
சில பெண்கள் அங்கே வந்து தொழுவதும் இல்லை மற்ற வேலைகளை எல்லாம் பார்த்துவிட்டு போவதாக பள்ளிகளுக்கு பொறுப்பானவர்கள் வேதனையோடு சொல்கிறார்கள்.
(ஏப்ரல் 19 இல் நீர் கொழும்பு பள்ளியில் கனத்த மனதின் பாரம், இப்போது விழுகிற ஒவ்வொரு அடியிலும் மெல்லென இறங்குகிறது!)
Mujeeb Ibrahim
( முடியுமானவரை இதனை பகிருங்கள்)

0 comments: