Thursday, May 23, 2019

முஸ்லிம் ஆசிரியரை இடம்மாற்றுமாறு பெற்றோர் ஆர்ப்பாட்டம்

அம்பலாந்தோட்டை – மல்பெத்தாவ மஹா வித்தியாலயத்தில் பணியாற்றி வரும் முஸ்லிம் ஆசிரியரை இடம்மாற்றுமாறு கோரி, அந்தப் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால், இன்றைய தினம் (23) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய ஹம்பாந்தோட்டை வலயக் கல்விக் காரியாலய அதிகாரிகள் குறித்த முஸ்லிம் ஆசிரியரை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.


பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பாதுகாப்புக் குழுக்களினால், பாடசாலை வாயிலுக்கு முன்னால் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்ற போதிலும், மேற்படி ஆசிரியர், தன்னைப் பரிசோதிக்க வேண்டாமெனக் கூறுவதாகவும் சோதனை செய்ய இடமளிப்பதில்லை என்றும், பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
என்றாலும் குறித்த ஆசிரியர் சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பாடசாலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


என்றாலும் குறித்த ஆசிரியர் பாடசாலையில் இருப்பதால் தமது பிள்ளைகளுக்குப் பாதுகாப்பில்லை என தெரிவித்துப் பெற்றோர், தமது பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். பின்னர் ஹம்பாந்தோட்டை வலயக் கல்விக் காரியாலய அதிகாரிகள், அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்னர், குறித்த முஸ்லிம் ஆசிரியரைப் பாடசாலையிலிருந்து வேன் ஒன்றில் ஹம்பாந்தோட்டை வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளன ஹம்பாந்தோட்டை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி சாமந்தி, குறித்த முஸ்லிம் ஆசிரியர் தொடர்பில் நிரூபிக்கக்கூடிய குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். 

Author: verified_user

0 comments: