Sunday, May 19, 2019

முஸ்லிம்கள் எதைச் செய்தாலும் அது "பயம்" அல்லது "நடிப்பு" என்றே அர்த்தம் கற்பிக்கப்படுகிறது...!!

எமது முன்னோர்கள் ஏனைய மதத்தவர்களோடு கலந்து வாழ்ந்தார்கள் ஆனால் கரைந்து போகவில்லை.

முஸ்லிம்களின் கலாச்சார நிகழ்வுகளில் சிங்களவர்கள் கலந்து கொள்வார்கள்.

அதேபோல் சிங்களவர்களின் கலாச்சார நிகழ்வுகளில் முஸ்லிம்களும் கலந்து கொள்வார்கள்.

பின்னர் இலங்கையின் தெளஹீத் இயக்கங்களின் தோற்றத்தின் பின்னர் மாற்றுமதத்தவர்களும் முஸ்லிம்களும் சம்பந்தப்படும் எல்லா விடயங்களையும் "பித்அத்" என்ற வட்டத்துக்குள் கொண்டுவந்தார்கள்.

தேசிய கொடிக்கு மரியாதை செய்தல், தேசிய  கீதத்துக்கு எழுந்து நிற்றல் போன்ற விடயங்கள் மார்க்கத்துக்கு முரண் என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள்.

இலங்கை மாதிரி பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும்  என்ற பாடத்துக்கு பதிலாக ஒரு முஸ்லிம் எதை எதை எல்லாம் செய்தால் அவன் மார்க்கத்தை விட்டு தூரமாகுவான் என்று பாடம் நடத்தத் தொடங்கினார்கள்.

இதற்கு "இஸ்லாத்தை தூயவடிவில் பின்பற்றுதல்" என்ற அழகான தலைப்பையும் வைத்துக் கொண்டார்கள்.

இந்த "பித்அத்" என்ற சொல்லை சொல்லிச் சொல்லி முஸ்லிம்களை பயம் காட்டத் தொடங்கினார்கள்.

கடைசியில் மாற்று மதத்தவர்களின் "பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்லலாமா"

"அவர்களது ஜனாசாவுக்கு பிரார்த்திக்க முடியுமா"

என்றெல்லாம் பயான் பன்னத் தொடங்கினார்கள்.

இப்படியான பயான்களினாலும் பித்அத் என்று சொல்லின் மீதுள்ள பயத்தினாலும் முஸ்லிம்கள் ஏனைய மதத்தவர்களுடன் சம்பந்தப்படும் எல்லா விடயங்களையுமே புறக்கணிக்க தொடங்கினார்கள்.

இந்த காரணங்களினால் ஏனைய மதத்தவர்களுடன் முஸ்லிம்களுக்கு இருந்த நல் உறவு  வெகுவாக பாதிக்கப்பட்டது.

அரசியல்,இனவாதம்,தீவிரவாதம் என்று இனங்களுக்கிடையிலான விரிசல் அதிகரித்து இருக்கும் இந்தக் காலப்பகுதியில்.

முஸ்லிம்கள் எதைச் செய்தாலும் அது "பயம்" அல்லது "நடிப்பு" என்றே அர்த்தம் கற்பிக்கப்படுகிறது.

"மத நல்லிணக்கம்", " சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமை" போன்ற விடயங்களில்  முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் எந்த அக்கறையும் செலுத்தாமல் இருந்ததன் விளைவுதான், இப்போது சிங்களவர்களை திருப்திப்படுத்துவதற்காகவேனும் சில விடயங்களை செய்தாக வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

நாம் எப்போதும் இயல்பாகவும், இலங்கையர்களாகவும்,முஸ்லிம்களாகவும் இருந்திருக்க வேண்டும்.

அப்படி இருந்து இருந்தால் இந்த  "ஓவர் எக்டிங்" எதுவுமே தேவைப்பட்டிருக்காது.

Safwan Basheer

Author: verified_user

0 comments: