வவுனியா சாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பகுதியில் நேற்று இரவு மர்மப் பொதியொன்று காணப்பட்டதையடுத்து அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழல் காணப்பட்டது.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா சாளம்பைக்குளம் பள்ளிவாசலை அண்மித்துள்ள பாலத்தின் அருகே கைவிடப்பட்ட நிலையில் மர்மப் பொதி ஒன்று காணப்படுவதாக நேற்று (14.05.2019) இரவு பூவரசங்குளம் பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்தது.
இந்நிலையில், இரகசிய தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் குறித்த மர்ம பொதியினை சோதனையிட்டுள்ளார்கள்.
இதனால் அப்பகுதி வீதிகளும் முடக்கப்பட்டு இராணுவத்தினரால் கடும் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாளம்பைக்குளம் பகுதியில் பதற்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது.
சோதனைக்குட்படுத்தப்பட்ட மர்மப் பொதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையிலிருந்து நான்கு கூரிய வாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதையடுத்து நேற்று இரவு பொலிஸாரும் இராணுவத்தினரும் அப் பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தார்கள் எனினும் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் இராணுவத்தினருடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments: