இலங்கையில் அரச நிறுவனங்கள், அரச காணிகளிலும் மற்றும் வீதிகளிலும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைத் தவிர்ந்த ஏனைய மொழிகளில் பெயர்ப் பலகைகளை காட்சிப்படுத்த வேண்டுமாயின் அது குறித்து தனது அமைச்சின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடுமுழுவதும் உள்ள அனைத்து வீதிகளின் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான பணிப்புரை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு பிரதமரால் வழங்கப்பட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அரச கரும மொழிகள் அமைச்சின் நடவடிக்கை தொடர்பில் எமது செய்திச் சேவை வினவியபோது அமைச்சர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

0 comments: