இலங்கையின் 30 வருட புலனாய்வு அனுபவத்தை கொண்டு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையை வெற்றிக்கரமாக நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் 95 வீதமான பயங்கரவாதிகளை இதுவரை கைதுசெய்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி இன்னும் இரண்டு அல்லது மூன்று பயங்கரவாதிகளையே கைதுசெய்ய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது இயல்புநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் முகமாக கொழும்பில் உள்ள ராஜதந்திரிகளுடன் இன்று ஜனாதிபதி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இதன்போது இஸ்லாமிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி, நாட்டை இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் வெளிநாடுகள் பலவும் உதவின.
இந்தநிலையில் விரைவில் இலங்கையில் இருந்து வெளிநாட்டு பயங்கரவாதம் துடைத்தெறியப்படும். எனவே வெளிநாடுகள், தமது மக்கள் இலங்கைக்கு செல்வது தொடர்பில் விடுத்துள்ள சுற்றுலா அறிவுறுத்தல்களை விலக்கிக்கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இதன்போது தகவல் வழங்கிய, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ரவீந்திர விஜேயகுணவர்த்தன, இதுவரை 9 பெண்கள் உட்பட்ட 73 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, தமிழர்கள் அனைவரையும் விடுதலைப்புலிகள் என்று பார்த்ததைப்போன்று முஸ்லிம்களையும் பார்க்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
நாட்டில் உருவாகியிருப்பது உள்நாட்டு பிரச்சனையல்ல. வெளிநாட்டுப்பிரச்சினை. இதனை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். 1983ஆம் ஆண்டு தமிழர்கள் தாக்கப்பட்டமை காரணமாகவே விடுதலைப்புலிகள் போன்ற அமைப்பினர் உருவாகினர்.
இதன்காரணமாக நாடு 30 வருடங்களாக போர் ஒன்றை சந்திக்கவேண்டியேற்பட்டது. எனவே அனைவரும் சிந்தித்து செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி கோரினார்.
இன்னும் இரண்டு நாட்களில் முழு பயங்கரவாதிகளையும் பிடித்துவிடமுடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

0 comments: