Tuesday, April 30, 2019

கோத்தபாய ராஜபக்சவின் காலத்தில் தான்இஸ்லாமிய அடிப்படைவாதம் போஷிக்கப்பட்டது. 26 பேருக்கு சம்பளம் வழங்கப்பட்டது.

இலங்கைக்குள் இயங்கிய இஸ்லாமிய அடிப்படைவாதம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் காலத்தில் போஷிக்கப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றோம். பொறுப்பில் இருந்து விலகி செல்லவில்லை.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமெரிக்கா உட்பட பல நாடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.தவ்ஹித் ஜமாத், பொதுபல சேனா போன்ற அமைப்புகளுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் காலத்தில் ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டன.


வவுணதீவு பொலிஸ் காவலரணில் பொலிஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அப்துல் ராசிக் என்ற சந்தேக நபர், புலனாய்வுப் பிரிவு சம்பளம் வழங்கியுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் காலத்தில் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து செயற்பட்ட இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.  இவ்வாறான 26 பேருக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இவர்களுக்கான இணைப்புச் செயலாளராக இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் இருந்துள்ளார்.

தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் அடுத்த ஒரு மாதத்திற்குள் வெளியிடுவோம். அப்போது தேசப்பற்றாளர்கள் யார் என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள முடியும். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தை அதிகாரத்தில் வைத்திருக்க இந்த மேஜர் ஜெனரல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தவ்ஹித் ஜமாத் அமைப்பின்  பிரதிநிதிகள்ள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர். அந்த இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இருந்துள்ளார். அந்த அமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவையும் சந்தித்துள்ளனர்.

இவர்கள் சிங்கள இனவாதிகள், ஒரு அடிப்படைவாத அமைப்பு மற்றுமொரு அடிப்படைவாத அமைப்புக்கு உதவியுள்ளது. 

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் ஷரியா சட்டத்தை கற்பிக்கும் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கை முன்னாள் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஷரியா சட்டத்திற்கு உதவிய அமைப்புகள் இருக்கின்றன.

2013 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி அக்குரணை பிரதேசத்தில் கல்லூரி ஒன்றுக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. சரியான புலனாய்வு பிரிவுகள் இருந்திருந்தால், இந்த அமைப்புகள் உருவாகும் போது கவனம் செலுத்திருக்க வேண்டும்.

ஷரியா சட்டத்தின் கீழ் 2011-2012 ஆம் ஆண்டுகளில் கல்லூரிகளுக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஷரியா சட்டம் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இஸ்லாம் மார்க்கத்தை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்பட்டது.2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஷரியா சட்டத்தின் கீழ் 200 பள்ளிவால்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஷரியா சட்டத்தின் கீழ் எந்த பள்ளிவாசல்களும் நிர்மாணிக்கப்படவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு சட்ட அந்தஸ்து வழங்கிய பிதா மகன் கோத்தபாய ராஜபக்ச, இராணுவத்தினரை வேட்டையாடுவதாக எம்மீது குற்றம் சுமத்துகின்றனர்.
எனினும் அந்த காலத்தில் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி கபில ஹெந்தாவித்தாரணவே தற்போது, ஷெங்கீரிலா ஹோட்டலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி. இரண்டு குண்டுகள் வெடிக்கும் வரை அவர் எங்கு இருந்தார். ஷெங்கீரிலா ஹோட்டலை பாதுகாக்க முடியாத அதிகாரியால் நாட்டை எப்படி காப்பாற்ற முடியும். இவர்கள் கடந்த காலத்தில் அரசியல் தேவைகளின் அடிப்படையில் கட்சிகளை உடைத்தனர்.

புது வருடத்திற்கு பின்னர் அரசியல் புரட்சி ஏற்படும் என சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளரும் இதனை கூறியிருந்தார். ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் புரட்சி ஏற்படும் என கூறினர்.

எனது முகநூல் பக்கம் செயலிழந்துள்ளது. இது குறித்து நான் ஜனாதிபதிக்கு அறிவித்தேன். ஜனாதிபதியின் திட்டப் பணிப்பாளர் தனது முகநூல் பக்கத்தில் புத்தாண்டுக்கு பின்னர் அரசியல் புரட்சி ஏற்படும் என பதிவிட்டிருந்தார்.

இது இதயத்தை உலுக்கும் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம். ஏப்ரல் 15 ஆம் முகநூலில் இடப்பட்ட இந்த பதிவு ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டு தாக்குதலின் பின்னர் முகநூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இது குறித்தும் ஜனாதிபதிக்கு அறிவித்தேன். இந்த அதிகாரிக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியை சுற்றி இருப்பவர்கள் பற்றியும் விசாரிக்க வேண்டும். இப்படியான பதிவுகள் மூலம் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
தற்போது பயங்கரவாத செயற்பாடுகள் அடக்கப்பட்டுள்ளன. தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடுதல்கள் மற்றும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புர்கா மற்றும் பயங்கரவாத அமைப்புகளை ஜனாதிபதி தடைசெய்துள்ளார். இந்த தாக்குதல்களுடன் அப்பாவி முஸ்லிம் மக்கள் கவலைக்கும் அசௌகரித்திற்கும் உள்ளாகியுள்ளனர் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்

Vedio LINK YOUTUBE 

Author: verified_user

0 comments: