Showing posts with label ARTICLE. Show all posts
Showing posts with label ARTICLE. Show all posts

Sunday, June 9, 2019

எடுத்ததற்கெல்லாம் உலமா சபையை, விமர்சனம் செய்வதை தவிர்ப்போம்...!

எடுத்ததற்கெல்லாம் உலமா சபையை, விமர்சனம் செய்வதை தவிர்ப்போம்...!

எல்லா சமூகத்தினராலும் அவரவர்களின் சமயத் தலைவர்களுக்கென தனி மதிப்பும் மரியாதையும் வழங்கப்படும்போது முஸ்லிம்களின் மார்க்க தலைமையான உலமாசபைக்கு மாத்திரம் முஸ்லிம்களினாலேயே பலத்த விமர்சனமும், தேவையற்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுவது கவலைக்குரியதாகும். உண்மையில் ஏனையவர்களைவிடவும் சமூகம் தொடர்பாக அதிக பொறுப்புணர்வோடு செயற்படுபவர்கள் இந்த உலமாசபை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை எங்களைவிடவும் மாற்று மதத்தவர்கள் நன்கறிந்து வைத்துள்ளனர்.

முஸ்லிம்கள் பாதுகாப்பு ரீதியாக மிகவும் அச்சுருத்தலுக்குள்ளாகி இருக்கும் இந்த இக்கட்டான காலத்தில் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக மிகவும் கவலையோடும், பிரார்த்தனையோடும் 24 மணிநேரமும் தங்களாலான சகல முயற்சிகளையும் செய்து கொண்டே இருக்கின்றனர். அலுத்கம தொடக்கம் மினுவாங்கொடை வரையில் இடம்பெற்ற வன்முறைகளின்மூலம் மீண்டுமொரு முறை இனக்கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை அடியோடொழிக்க எத்தனிக்கும் சில கடும்போக்கு வாதிகளின் பல சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டதில் இவர்களின் பங்களிப்பு அளப்பெரியது.

தற்போது உலகம் பூராகவும் பேசப்படும் வரலாற்று முக்கியத்துவமிக்க சம்பவமாக வர்ணிக்கப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமைக்கு பிரதான வழிகாட்டியும் இவர்கள்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஞானசார தேரர் காலக்கெடு விதித்த அன்றைய தினமே கட்சி கொள்கையாலும் கருத்து முரண்பாட்டாலும் பிரிந்திருந்த அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளையும் அவசரஅவசரமாக அழைத்து சமூகப் பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை மிகவும் உருக்கமாக வேண்டிக் கொள்ளப்பட்டதன் விளைவே இன்றைய ஒற்றுமையாகும். இருந்தும் நடைமுறைப் பிரச்சினை கருதி இதுவரை இது தொடர்பாக பகிரங்கப்படுத்தவில்லை. அத்தோடு இவர்களின் செயற்பாடுகள் இறை திருப்தியையும், சமூக நலனையும் மாத்திரம் நோக்காக கொண்டிருப்பதனால் விளம்பரங்களோ ஆரவாரமோ கொண்டதாக இருப்பதில்லை. மீடியாக்களில் மாத்திரம் தகவல்களை எதிர்பார்க்கும் பலருக்கு இவர்களின் செயற்பாடுகள் சென்றடைவதுமில்லை.

இதன் காரணமாகவே இவர்கள் மீதான விமர்சனமும், அவமதிப்பும் (கற்றவர்களால்கூட) தொடர்ந்த வண்ணமுள்ளன.

எனவே இந்நிலை மாற வேண்டும். அரயல்வாதிகளை விமர்சனம் செய்வதுபோல் எடுத்ததற்கெல்லாம் உலமா சபையையும் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவர்களின் பணியை அவர்களால் முடிந்தவரை சிறப்பாக செய்கின்றனர். அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கென உயர்ந்த அந்தஷ்த்துண்டு என்பதையும் மறந்துவிடக் கூடாது.

நளீம் றம்சாத்.

Thursday, June 6, 2019

போத்தல்களில் அடைக்கப்படும் குடிநீரை தொடர்ந்து பருகுவதால் என்ன நிகழும் தெரியுமா?

போத்தல்களில் அடைக்கப்படும் குடிநீரை தொடர்ந்து பருகுவதால் என்ன நிகழும் தெரியுமா?

மனித உடலில் பிளாஸ்டிக் துகள்கள்  அதிகமாக ஊடுருவுவதாக, புதிய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 

உணவு மற்றும் காற்றின் மூலம் மனித உடலை ஊடுருவும் பிளாஸ்டிக் துகள்கள், சமீப காலத்தில் அதிகரித்து காணப்படுவதாக குறித்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவது சுற்றுச் சூழல் தொடர்பில் பெரியளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் இந்த ஆண்டில், காற்றின் மாசு குறித்த விழிப்புணர்வை ஐநா மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கனடாவை சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், ஆண்டுதோறும் 52,000 நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களின் உடலுக்குள் ஊடுருவி செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
மனிதர்களால் உருவாக்கப்படும் சின்தடிக் உடைகள், கார் டயர்கள் மற்றும் கென்டக்ட் லென்சுகள் உள்ளிட்டவற்றில் இருந்து உருவாகும் இந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள், மனிதர்கள் சாப்பிடும் உணவுகள் மற்றும் சுவாசிக்கும் காற்றின் மூலம் உடலுக்குள் சென்று, பாதிப்பை உருவாக்குவதாக அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காற்று மாசுப்பாடு காரணமாக வருடம் தோறும் 1,21,000 பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் செல்வதாகவும், குறிப்பாக பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்படும் குடிநீரை தொடர்ந்து பருகுவதால் கூடுதலாக 90,000 பிளாஸ்டிக் துகள்கள் நமது உடலை சென்றடைவதாகவும் குறித்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நுண் பிளாஸ்டிக் துகள்களால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையாக இன்னும் கண்டறியப்படவில்லை.

ஆயினும் 130 மைக்ரோமீட்டருக்கும் குறைவான இந்த பிளாஸ்டிக் துகள்கள், மனிதனின் திசுக்களில் ஊடுருவி அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் அளவிற்கு மிகவும் அபாயம் மிக்கவை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 5, 2019

ரத்ன தேரரே, உங்களால் இப்படிச் செய்ய முடியுமா..?

ரத்ன தேரரே, உங்களால் இப்படிச் செய்ய முடியுமா..?



அத்துரலிய ரத்ன தேரோ அவர்களே....!

மூன்று பேருக்கு எதிராக, நான்கு கோரிக்கைகளை முன்வைத்து, மூன்று நாட்கள் ( தண்ணீர் மட்டும் குடித்து ) உண்ணா விரதமிருந்து , சாதித்து காட்டிய நீங்கள் தான் உண்மையான பௌத்தன் என்று இலங்கை நாடே ஏற்றுக்கொண்டுள்ளது .

எனவே , நீங்கள் நினைத்தால் இந்த நாட்டில் எதையும் செய்யலாம் சாதிக்கலாம். அந்த வகையில் இன்னும் பல விடயங்கள் இருந்தாலும் ஒருசிலதை முன்வைக்கின்றேன்.......!

₹ மத்திய கிழக்கு நாடுகளில், அரேபியர்களின் ஆடைகளையும், மலசல கூடங்களையும் கழுவுகின்ற பௌத்த மதத்தைச் சார்ந்த சகலரும் இலங்கை வர வேண்டும்.

₹ நமது நாட்டு வளங்கள் , எந்தவொரு அரபு நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யக் கூடாது (உதாரணம்- தேயிலை).

₹ அரபு நாடுகளிலிருந்து எந்தவொரு பொருட்களும் கொள்வனவு செய்யக் கூடாது ( உதாரணம்- எரிபொருட்கள் ,தானிய வகைகள்).

₹ இலங்கை நாட்டுக்கு, அரபு நாடுகளால் கட்டிக் கொடுக்கப்பட்ட சகல ஆஸ்பத்ரிகளும் உடைத்து நொறுக்கப்பட்ட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிருதம் இருந்து சாதிக்க நீங்கள் தயார் என்றால்...., உங்களுக்கு உதவியாக பாடுபடவும், உங்களோடு சேர்ந்து பயணிக்கவும் (முஸ்லிம்களாகிய) நாங்கள் தயார்.......

Tuesday, June 4, 2019

ஜம்இய்யதுல் உலமாவின், மேலான கவனத்திற்கு...!

ஜம்இய்யதுல் உலமாவின், மேலான கவனத்திற்கு...!

நேற்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இப்தார் நிகழ்ச்சியில்;; கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள் குழு முஸ்லிம்களின் பாதுகாப்பு, அப்பாவிக் கைதிகளின் விடுதலை, முஸ்லிம் பெண்களது ஆடை ஆகியன தொடர்பாக வரையப்பட்ட கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததாகவும், ஜனாதிபதியின் சபையில் ஜம்இய்யத்துல் உலமா தலைவர் சமூகத்தின் கௌரவத்தை எடுத்துக் காட்டியமையும் ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்தது. அல்லாஹ் ஜம்இய்யத் உலமா தலைவருக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் அருள் புரியவேண்டும்.

இங்கு நான் எழுதப்போகின்ற விடயம் ஜம்இய்யத்துல் உலமாவை விமர்சிப்பதற்காக அல்ல. ஓர் ஆலோசனையை முன்வைப்பதற்காக மட்டுமே.

நான் ஜம்இய்யாவிடம் மிகத் தாழ்மையாக முன்வைக்கின்ற ஆலோசனை யாதெனில் முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் ஜம்இய்யா தனது கருத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே.

ஜனாதிபதிக்கு வழங்கிய கடிதத்தில் முஸ்லிம் பெண்களின் ஆடைதொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கோறியிருந்தமை ஜம்இய்யா ‘பெண்கள் முகம் மறைக்க வேண்டும்’ என்ற விடயத்தில் இன்னும் பிடிவாதமாக இருப்பதை சுட்டிக்காட்டுவதாகவே உள்ளது, ஜம்இய்யதுல் உலமா இஸ்லாத்தையும் எல்லா முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பு என்றவகையில் குறித்த விடயத்தில் பிடிவாதத்தைத் தளர்த்த வேண்டும் என்பதே எனது ஆலோசனையாகும். அதற்கான நியாயங்கள் பல

1. அரசாங்கம் முகத்தை மறைத்தலை மாத்திரமே தடைசெய்தது. ஆனால் இனவாதிகளோ அபாயா, இஸ்காப் ஆகியவற்றைக் கூட எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடாத்தினர். அதனால் முஸ்லிம் பெண்கள் பல்வேறு இடைஞ்சல்களுக்கு உள்ளாகினர். இவ்வாறான நிலையில் நாம் முகம் மறைத்தலுக்கான அனுமதியைப் பெற்று, வெற்றி பெற்றோம் என்ற மகிழ்ச்சியல் அதை நடைமுறைப் படுத்தும் போது பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரலாம்.

2. முகம் மறைக்கும் விடயத்தில் உலமாக்கள் மத்தியல் நிறையக் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஷாபி மத்ஹபில் கூட முகம் மறைத்தல் கட்டாயமல்ல. இந்நிலையில் ஜம்இய்யதுல் உலமா முகம் மறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பது பொருத்தமானதல்ல.

3. முகம் மறைத்தல் பெண்ணின் உரிமையோடு தொடர்பான விடயம். எனவே அதைப் பெண்கள் பேசட்டும். ஜம்இய்யதுல் உலமாவோ அல்லது ஏனைய ஆண்களோ அதைப் பற்றிப் பேசும் போது இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானது என்ற விமர்சனத்திற்கு ஆதாரமாய் அமைந்துவிடும்

4. பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை விட ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ‘பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்;’ என்ற அல்குர்ஆனியக் கட்டளைக்கு முன்னுரிமை வழங்குதல் இஸ்லாம் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தும்.

5. முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தை வெறுப்பதற்கு பெண்களின் முகத்திரையும் ஒரு காரணம் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் முகத்திரை முக்கியமா? இஸ்லாம் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தல் முக்கியமா? பொருத்தமானதைத் தெரிவுசெய்வதில் ஜம்இய்யா அதி;க கவனம் செலுத்த வேண்டும்.

6. முகத்தை மூடும் சில பெண்கள் பொது இடங்களில் வெளிப்படுத்தும் நடத்தைக் கோளம் முகத்தை மறைப்பதற்காகக் கூறப்படும் தாத்பரியத்திற்கு முரணாக இருத்தல்

7. தமது முகத்தை அல்லது தமது பெண்களின் முகத்தை எந்த ஆணும் பார்க்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ள குறைந்த வீதத்தினருக்காக போராடுவது முழு சமூகத்தையும் பிரதிநிதிதுவப்படுத்தும் ஜம்இய்யாவுக்குப் பொருத்தமானதா?

8. ஜம்இய்யா முகத்திரைக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் போது, முஸ்லிம் அல்லாத அரசியல் வாதிகள் கூட முகத்திரை விவகாரம் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கலாம். அதனால் ஏற்படும் வாதப் பிரதிவாதங்களால் முகத்திரை முஸ்லிம்களின் அவமானச் சின்னமாக மாறலாம்.

9. ஜம்இய்யதுல் உலமா முகத்திரையை வலியுறுத்தும் போது தொழில் புரியும் சில பெண்களும் அதை தமக்குக் கட்டாயப்படுத்திக் கொள்கின்றனர். இது பல சந்தர்ப்பங்களில் அவர்களது தொழிலுக்கு இடைஞ்சலாகி கடும் விமர்சனத்திற்கு ஆளாகின்றனர்.

10. சில முஸ்லிம் பெண்கள் சுயநலனுக்காகவும் குறுகிய இலாபத்திற்காகவும் முகத்திரையைப் பயன்படுத்துவதனாலும், சில சமூகவிரோதிகள் முகத்திரை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதனாலும் முகத்திரைக்கிருந்த நம்பிக்கையும் நல்லபிப்பிராயமும் மக்கள் மத்தியில் இல்லாமல் போய்விட்டது.

11. அனைத்துக்கும் மேலாக, முகம் மூடுவதை அல்லாஹ் கட்டாயப்படுத்தாத நிலையில் ஒருசாராரின் விருப்பத்திற்கமைய அதைக் கட்டாய நிலைக்குக் கொண்டுவருவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் கைவித்த குற்றத்திற்கு, அவன் இலகுவாக்கியதை கஷ்டப்படுத்திய குற்றத்திற்கு ஆளாக்க மாட்டாதா?

ஜம்இய்யதுல் உலமா முகம் மூடுவதைக் கட்டாயப்படுத்தவில்லை என்றிருப்பின் இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்பதையும் தற்போது நாட்டில் உள்ள நிலைமைகளையும் கவனத்திற்கொண்டு இனிமேல் ஜம்இய்யதுல் உலமா முகத்திரை விவகாரத்தை பேசாமல் இருப்பதே ஜம்இய்யாவுக்கும் சிறந்தது, முஸ்லிம்களுக்கும் சிறந்தது என்பதே எனது பணிவான அபிப்பிராயமாகும்.

அஷ்செய்க் எம்.எம். பஸ்லுர்ரஹ்மான் Naleemi, B.A., SLTS
"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்..." என்பது முட்டாள்தனம்

"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்..." என்பது முட்டாள்தனம்

- Kalai Marx -

"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்..." என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் மூலம் அறிய முடிகின்றது. இது உண்மையில் "அறியாமை, இனவாதம், முட்டாள்தனம்" கலந்த கற்பனாவாதக் கருத்து. பாமரர் முதல் படித்தவர் வரையில் இந்தத் தப்பெண்ணம் நிலவுகின்றது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர்கள் குறித்தும் இது போன்றதொரு தப்பெண்ணம் சிங்களவர் மத்தியில் இருந்தது. அதாவது "தமிழர் மீது கைவைத்தால் இந்தியா தலையிடும்..." என்று நம்பினார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் (ஈழத்)தமிழர்கள் எல்லோரும் இந்துக்கள். இந்தியாவில் இருப்பவர்களும் இந்துத் தமிழர்கள் தான்.

இன்று இதைக் கேட்டு பலர் சிரிக்கலாம். ஆனால், ஐம்பதுகள் முதல் எண்பதுகள் வரையான காலகட்டத்தில், பெரும்பாலான சிங்களவரின் சிந்தனை அவ்வாறாகத் தான் இருந்தது. அவர்களும் தம்மை ஒடுக்கப்படும் சிறுபான்மை இனமாகக் கருதிக் கொண்டனர். பெரும்பான்மை இனமான தமிழர்கள் இந்திய உதவியுடன் சிங்களவரை அழித்து விடுவார்கள் என்று அஞ்சினார்கள். குறிப்பாக, இந்திய - இலங்கை ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் தான் இந்த சிந்தனையில் மாற்றம் வந்தது.

ஆகையினால் "முஸ்லிம் நாடுகள் தலையிடும்... கேள்வி கேட்கும்..." என்றெல்லாம் நினைத்துக் கொள்வது ஒரு முட்டாள்தனமான இனவாதக் கருத்து. நவீன உலகில் எல்லா நாடுகளும் தத்தமது அரசியல், பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றன. முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமை, கிறிஸ்தவ நாடுகளின் ஒற்றுமை என்று எதுவும் கிடையாது. அந்த நாடுகளே தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. ஏனென்றால் மத உணர்வை விட, இன உணர்வை விட பண உணர்வே முக்கியமானது. அது தான் யதார்த்தம்.

இந்தியாவில், 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப் பட்ட பின்னர் நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர். 2002 ம் ஆண்டு, குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையில் முஸ்லிம்கள் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப் பட்டனர். அதை விட முஸ்லிகளுக்கு எதிரான அரச பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மாட்டிறைச்சி வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப் பட்ட முஸ்லிம்கள் ஏராளம்.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை எந்த முஸ்லிம் நாடு தட்டிக் கேட்டது? இதன் எதிர்விளைவாக, அயலில் உள்ள முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தானும், பங்களாதேஷும் இந்தியா மீது படையெடுத்தனவா? வளைகுடா முஸ்லிம் நாடுகள் இந்தியாவுக்கு ஒரு சொட்டு எண்ணை கொடுக்க மாட்டோம் என்று பகிஷ்கரித்தனவா? தமது நாடுகளில் வேலை செய்யும் இலட்சக் கணக்கான இந்தியத் தொழிலார்களை, துறை சார் நிபுணர்களை திருப்பி அனுப்பி விட்டனவா? குறைந்த பட்சம், எல்லா முஸ்லிம் நாடுகளும் ஒன்று சேர்ந்து இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்புகளை முறித்துக் கொண்டனவா? இல்லை. இதில் எதுவுமே நடக்கவில்லை.

அன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு காரணமான நரேந்திர மோடி, இன்று இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். அவரது வெளிநாட்டுப் பயணங்களில் பல முஸ்லிம் நாடுகளும் அடங்கி இருந்தன. அந்த நாடுகளின் தலைவர்கள் எல்லாம், மோடியின் இரத்தக் கறை படிந்த கரங்களை பிடித்துக் குலுக்கி வரவேற்றார்கள். அந்த முஸ்லிம் நாடுகளின் அரசாங்கத்தில் இருந்த ஒருவர் கூட எதிர்ப்புக் காட்டவில்லை.

அதே நேரம், இனப்படுகொலை குற்றவாளி நரேந்திர மோடி தனது நாட்டுக்கு வரக் கூடாது என்று கிறிஸ்தவ அமெரிக்கா விசா கொடுக்க மறுத்தது. முஸ்லிம் இனப்படுகொலையில் ஈடுபட்ட, ஒரு காலத்தில் மோடி உறுப்பினராக இருந்த இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். அமைப்பை, வெளிநாட்டு பயங்கரவாத இயக்கம் எனத் தடை செய்தது. நரேந்திர மோடி இன்னொரு கிறிஸ்தவ நாடான பிரித்தானியாவுக்கு சென்ற நேரம் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வெளியில் தலைகாட்டவில்லை.

இலங்கை அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தார்கள் என்றால், அதற்கு காரணம் முஸ்லிம் நாடுகளின் செல்வாக்கு அல்ல. முஸ்லிம் அமைச்சர்களை வைத்திருந்தால், முஸ்லிம் நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணலாம். அது மட்டுமல்ல, தனது நாட்டில் இனப் பிரச்சினை இல்லையென்று உலகை ஏமாற்றுவதற்கான பேரினவாத அரசின் தந்திரம். அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை சேர்த்துக் கொண்டுள்ளதாக காட்டி, இங்கே சிறுபான்மையினருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்லி வருகின்றது. இலங்கையில் தேர்தல் ஜனநாயகம் சிறப்பாக இயங்குவதாக காட்டிக் கொள்கிறது.